காங். தலைமை வலுக்கட்டாயமாக தலையிடுகிறது.. சோனியாவுக்கு அமரீந்தர் சிங் கடும் கோபத்துடன் கடிதம்
அமிர்தசரஸ் : பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கோபமான கடிதத்தில் காங்கிரஸ் தலைமை மீது கடுமையாக வெடித்துள்ளார். பஞ்சாப் அரசாங்கத்தின் செயல்பாட்டிலும், மாநில அரசியலிலும் காங்கிரஸ் மேலிடம் "பலவந்தமாக தலையிடுகிறது" என்று கூறியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற விரும்பும் காங்கிரஸ் மேலிடம், முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்துவிற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.
பஞ்சாப் தேர்தல்: திடீர் திருப்பம்- கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் காங். சித்து? முதல்வர் வேட்பாளர்?
காங்கிரஸ் தலைமை
சித்துவிற்கு முக்கியத்துவம் தராவிட்டால் அவர் ஆம் ஆத்மியில் இணைந்துவிடுவாரோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அங்கு சென்றால் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக சித்து அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் உஷாரான காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வழங்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் முதல்வர்
இந்த விவகாரத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் இரு தலைவர்களையும் டில்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிருப்தி
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில், சித்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ராகுல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஆகியோரும் உடனிருந்தனர். சித்துவிற்கு காங்கிரஸ் தலைமை அதிக முக்கியத்துவம் தருவதால் முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதனையடுத்து சோனியா காந்திக்கு கோபமாக கடிதம் ஒன்றை அமரீந்தர் சிங் அனுப்பி உள்ளார்.
தலையீடு
பஞ்சாப் அரசாங்கத்தின் செயல்பாட்டிலும், மாநில அரசியலிலும் காங்கிரஸ் மேலிடம் "பலவந்தமாக தலையிடுகிறது" என்று கூறியுள்ளார்.மேலும் காங்கிரஸ் தலைமை பஞ்சாப் அரசியலில் பிளவு ஏற்படுத்த நினைப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் அமரீந்தர் சிங் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பஞ்சாப் தலைவராக சித்து நியமிக்கப்பட உள்ளதை கேள்விப்பட்டு அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இதுவரை இதுபற்றி அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை.