வொய்ங்.. வொய்ங்.. சைரனுடன் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர்.. கடைசியில் டீக்கடையில் பஜ்ஜி சாப்பிட்ட அவலம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஜ்ஜியை சாப்பிடுவதற்காக சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் பஷீர்பாக் பகுதியில் நேற்று மாலை பயங்கர டிராஃபிக் ஜாம் இருந்தது. அப்போது அந்த வழியாக தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் சைரனை ஒலித்தபடியே வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர், ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை கண்டார். உடனே அந்த வாகனம் செல்லும் திசையில் பச்சை விளக்கை போட்டுவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை போக செய்தார். இதையடுத்து அந்த வாகனம் சிக்னலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சைரனை அணைத்துவிட்டு நின்றது.
சைரன் ஒலித்தால் நேராக நோயாளியை மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் இங்கு ஏன் நிற்கிறது என மனதிற்குள் கேட்டபடியே அந்த ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றார். அப்போது அந்த போலீஸ்காரருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
காரணம் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் மருத்துவமனை ஊழியர்களும் மிளகாய் பஜ்ஜி , போண்டா, டீ, காபி, ஜூஸ் ஆகியவற்றை வாங்கி சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உடனே அந்த காட்சிகளை போலீஸ்காரர் மறைத்து வைத்திருந்த கேமராவில் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் கூறுகையில் ஆம்புலன்ஸ் சேவைகளை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு தெலுங்கானா போலீஸ் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. அது போல் சைரனை தவறாக பயன்படுத்தாதீர்.
அவசர கால மருத்துவ உதவி தேவைப்படுவோரை அழைத்து செல்லும் போதுதான் சைரனை ஒலிக்க விட வேண்டும். மற்ற நேரத்தில் காரணமின்றி யாராவது ஒலிக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த 2 நிமிட வீடியோவில் டிரைவர் எதற்காக சைரனை ஒலித்தார் என்பதை போலீஸ்காரரிடம் விளக்கினார்.
அது போல் எதற்காக நொறுக்குத் தீனி கடை அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தினார் என்பதையும் கூறினார். விசாரணையில் அந்த வாகனத்தில் நோயாளி யாரும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த வீடியோவில் டிரைவர், ஒரு நர்ஸுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கூறுவதையும் கேட்க முடிகிறது.

அப்போது போலீஸ்காரர் டிரைவரிடம், " நீங்கள் சைரனை ஆன் செய்ததால்தான் நான் உங்களுக்கு வழிவிட டிராபிக்கை கிளியர் செய்தேன். ஆனால் நீங்களோ மருத்துவமனைக்கு செல்லாமல் மிளகாய் பஜ்ஜியையும் டீயையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நோயாளி எங்கே, பஜ்ஜி சாப்பிடத்தான் சைரனை ஒலிக்கவிட்டீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அந்த டிரைவருக்கு ரூ 1000 அபராதம் விதித்தார்.
சைரன் ஒலித்தபடி சென்றால் எத்தனை வேகத்திலும் சென்று ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்பதால்தான் சைரன் ஒலிக்கும் ஆம்புலன்ஸை பார்த்தவுடன் பொதுமக்களே சில நேரங்களில் டிராபிக் போலீஸாக மாறி போக்குவரத்தை கிளியர் செய்து ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்களோ இப்படி பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதித்த போது பொது போக்குவரத்து முடங்கியது, அது போல் லாக்டவுன் போடப்பட்டிருந்தது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாத நிலை எழுந்தது. அப்போது சொந்த ஊருக்கு படையெடுக்க மக்கள் விரும்பினர். ஆனால் ஊரடங்கால் தவித்தனர். அப்போது சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சைரன் ஒலித்தபடியே இவர்களை ஊர்களுக்கு அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications