அமெரிக்காவா, பிரிட்டனா? கன்பியூஸ் ஆகி.. வரலாற்றை மாற்றிக் கூறிய உத்தரகண்ட் பாஜக முதல்வர்
டேராடூன்: இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியதாக உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், வரலாற்றை மாற்றிக் கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய முதல்வராக திராத் சிங் ராவத் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்று இன்னும் ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் இவர் சிக்கி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் இவர் பேசிய பேச்சு, சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கிழிந்த ஜீன்ஸ்கள் போன்ற உடைகளை அணிந்து, அவர், மற்றவர்களுக்கு எப்படி முன்னுதாரணமாகத் திகழ முடியும்? என்று அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அமெரிக்காவா, பிரிட்டனா
இந்நிலையில் தற்போது அவரது பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி, உலகம் முழுவதையும் ஆண்ட அமெரிக்காகூட, கொரோனா பாதிப்பிலிருந்து மீளப் போராடுகிறது" என்று அவர் பேசினார். பிரிட்டன் நாட்டிற்குப் பதிலாக அமெரிக்கா என்று அவர் வரலாற்றை மாற்றிக் கூறிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியா சிறப்பாகக் கையாள்கிறது
கொரோனா பரவலை மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாகக் கையாள்வதாகக் குறிப்பிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார். மற்ற நாடுகள் எல்லாம் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியா கொரோனா பரவலைச் சிறப்பாகக் கையாள்கிறது என்றும் அவர் தெரிவித்தர். 200 ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி, உலகம் முழுவதையும் ஆண்ட அமெரிக்காகூட, கொரோனா பாதிப்பிலிருந்து மீளப் போராடுவதாக அவர் குறிப்பிட்டார்.

50 லட்சம் பேர் உயிரிழப்பு
சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கூட கொரோனா பாதிப்பால் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மோடியை தவிர வேறு யாரேனும் பிரதமராக இருந்திருந்தால் நிலைமை மேலும் மோசமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி தான் அனைவரையும் காப்பாற்றினார் என்றும் இருப்பினும் அவர் கூறிய வழிமுறைகளைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். மாஸ்க் அணிவது, சானிடைஸர் பயன்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை வெகு சிலரே முறையாகப் பின்பற்றுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications