மணிப்பூரில் அதிகரிக்கும் வன்முறை: குவிக்கப்படும் படைகள்! கூடுதலாக 2000 வீரர்களை அனுப்பிய மத்திய அரசு
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இனத்தவர் இடையேயான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக 2000 படை வீரர்களை அனுப்பியுள்ளது மத்திய அரசு.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஜிரிபம் பகுதியில் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து வருகின்றனர். ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப் படையினர் - ஆயுதக் குழுவினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு சி.ஆர்.பி.எஃப் படை முகாம் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் மணிப்பூர் போலீசார் நடத்திய தேடுதல் பணிகளின்போது, 2 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதியவர்கள் இருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், வீடுகளை தீயிட்டு எரிக்கும்போது 2 முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், காணாமல் போன 6 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 3 பெண்கள், 3 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூருக்கு கூடுதலாக 2 ஆயிரம் படை வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த 19 ஆயிரத்து 800 வீரர்கள் ஏற்கனவே மணிப்பூரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 20 கம்பெனி சி.ஏ.பி.எஃப் வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 1500 வீரர்கள், எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த 500 வீரர்கள் என மொத்தம் 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. மணிப்பூரின் தற்போதைய நிலைமையை கண்காணித்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விமானம் மூலம் உடனடியாக அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications