‛ஜெய் ஸ்ரீராம்’.. அயோத்தி கும்பாபிஷேகத்தை கொண்டாடும் பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர்.. யார் இவர்?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தானிஷ் கேனரியா ‛ஜெய் ஸ்ரீராம்' கூறி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதான் பிரதிஷ்டை என்ற பெயரில் விழா நடைபெற உள்ளது. விழாவுக்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அயோத்தி புறப்பட்டு வந்துள்ளார்.

கும்பாபிஷேகம் மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது. 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சடங்குகள் செய்ய உள்ளார். அவருடன் அர்ச்சகர்கள் வேதமந்திரங்களை கூற கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டுப்புற கலைகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பபட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள், இந்து அமைப்பின் தலைவர்கள் அயோத்தியில் கூடி உள்ளனர். மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழ்நாடு உள்பட பிற இடங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
பல இடங்களில் எல்இடி ஸ்கீரின் மூலம் திரை கும்பாபிஷேக விழா நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தானிஷ் கனேரியா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.அதுவும் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

அதாவது தானிஷ் கனேரியா தனது எக்ஸ் பக்கத்தில் ‛ஜெய் ஸ்ரீ ராம்' என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வீடியோ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார். அந்த வீடியோ என்பது பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடும் வகையில் உள்ளது. தற்போது இவரது இந்த பதிவு இணையதளங்களில் ஸ்கிரீன்ஷாட்டுகளாக பரவி வருகிறது.
தானிஷ் கனேரியா அடிப்படையில் ஒரு இந்து. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடிய முதல் இந்து வீரர் இவர் தான். இவரது முன்னோர்கள் இந்தியாவின் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர்கள் பாகிஸ்தான் கராச்சிக்கு புலம்பெயர்ந்து அங்கேயே வசித்து வந்த நிலையில் தானிஷ் கனேரியா அங்கு பிறந்தார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு தானிஷ் கனேரியா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் விரைவில் ராமர் கோவிலுக்கு வருகிறேன் என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications