மம்தா திடீர் யூடர்ன்.. அதிர வைத்த பெண் டாக்டர் பலாத்கார கொலை.. 42 டாக்டர்களின் இடமாற்றம் ரத்து
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் 42 டாக்டர்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை முதல்வர் மம்தா பானர்ஜி நிறுத்தி வைத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு 31 வயது நிரம்பிய பெண் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் மருத்துவ மேற்படிப்பை படித்து பயிற்சி டாக்டராக இருந்தார்.

அதாவது இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்து வந்த மாணவி பயிற்சி டாக்டராக ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பணியாற்றி வந்தார். கடந்த 8 ம் தேதி அவர் நைட் ஷிப்டில் பணியாற்றினார்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார். உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான நிலையில் மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது சுகாதாரத்துறையில் பல்வேறு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவகனைகளில் பணியாற்றி வரும் 42 டாக்டர்களை பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் சங்கீதா பால் மற்றும் சுப்ரியா தாஸ் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது மம்தா பானர்ஜி அரசு டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. அவரது அரசின் அலட்சியம் தான் பெண் டாக்டரின் உயிரை பறித்துள்ளது. மேலும் மம்தா பானர்ஜி அரசு தற்போது ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறது என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இது மம்தா பானர்ஜிக்கு கூடுதல் பிரஷரை கொடுத்தது.
மேலும் இன்று நாடு முழுவதும் பெண் டாக்டர் பலாத்கார படுகொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மம்தா பானர்ஜி அரசு திடீரென்று யூடர்ன் எடுத்துள்ளது. அதாவது மேற்கு வங்க சுகாதாரத்துறை பிறப்பித்த 42 டாக்டர்களின் பணி இடமாறுதலை மம்தா பானர்ஜி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவையும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன












Click it and Unblock the Notifications