இப்பவே துண்டு போடனும் ராஜா... ஜெகன் மோகன் ரெட்டியுடன் அமித்ஷா 'கொல்லைப்புற' பேச்சுவார்த்தை
Recommended Video
அமராவதி: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படியும் இருக்கலாம் என்பதால் இப்போதே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பாஜக தலைவர் அமித்ஷா, 'ஆதரவு' பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டாராம்.
லோக்சபா தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்பது பொதுவான கருத்து. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பது ஊடகங்களின் கருத்து கணிப்பு.

இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை பாஜக மேலிடம் இப்போதே தொடங்கிவிட்டது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்கின்றன கள நிலவரம்.
இதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் பாஜக தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளை இப்போதே தொடங்கிவிட்டார். ஜெகன் மோகன் ரெட்டியோ, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றினால்தான் 'ஆதரவு' என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
மேலும் தமது கட்சிக்கு அமைச்சரவையில் 'பசையான' துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்திருக்கிறாராம் ஜெகன். ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அமித்ஷாவுக்கும் இடையேயான இப்பேச்சுவார்த்தை குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கே தெரியாது என எதுவும் பேச மறுத்தும் வருகின்றனர்.
இதனிடையே ஜெகன் மோகன் ரெட்டி தொடர்புடைய ரூ947 கோடி வங்கி கடன் விவகாரத்தில் சிபிஐ 'மவுனி'த்து செயல்படும் என்கிற தகவலையும் பாஜக மேலிடம் அனுப்பியிருக்கிறதாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் வெளியேறியது முதலே பாஜகவுடன் ஜெகன் மோகன் ரெட்டி ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
தமக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்காத பிரதமர் மோடி, ஜெகன் மோகன் ரெட்டி உட்பட அவரது கட்சியினரை அடிக்கடி சந்தித்து பேசியதும் சந்திரபாபு நாயுடுவை அதிருப்தி அடைய வைத்திருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட பாஜக- ஜெகன் மோகன் ரெட்டி ரகசிய உறவு குறித்து விமர்சித்து வந்தார் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications