அமித்ஷாவின் "அடங்கா மொழிப் பற்று"- தமிழர்கள் தமிழுடன் இந்தியும் கற்க வேண்டுமாம்- புது சர்ச்சை!
அகமதாபாத்: தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழ் மொழியுடன் இந்தி மொழியையும் சேர்த்து கற்க வேண்டும்; தமிழர்கள் தமிழுடன் இந்தி மொழியையும் சேர்த்து கற்றால் நாடு முன்னேறுவதை எவராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு பேச்சு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து இந்தி மொழி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். டெல்லியில் அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை, அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை, மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது என குறிப்பிட்டிருந்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில், எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்! என கூறியிருந்தார்.
தமிழுடன் இந்தி கற்க வேண்டும்: இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் ஐஐடிஇ-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா மீண்டும் இந்தி மொழியின் அவசியம் குறித்து குறிப்பிட்டார். இந்தி மொழி குறித்து அமித்ஷா பேசியதாவது: ஆங்கில மொழியுடன் ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். குஜராத்திகள் குஜராத்தி மொழியுடன் இந்தியை கற்க வேண்டும். அஸ்ஸாமியர்கள், அஸ்ஸாமி மொழியுடன் இந்தியை கற்க வேண்டும்; தமிழர்கள், தமிழ் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும். அப்படி நடந்தால் நமது நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது. உபநிடதங்கள், வேதங்கள், சமஸ்கிருதத்தில் மட்டுமே உலகம் முழுவதற்குமான அறிவுகளஞ்சியம் இருக்கிறது. ஆகையால் இதனை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications