'அம்முவிலிருந்து அம்மாவாக..' கன்னடத்தில் வெளியான ஜெ. வாழ்க்கை வரலாறு புத்தகம்!
பெங்களூரு: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது.
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தூர்தர்ஷன் டிவி சேனலில் செய்தியாளர் மற்றும் துணை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் என்.கே.மோகன்ராம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
262 பக்கங்களை கொண்டதாக இந்த புத்தகம் உள்ளது. தற்போது பெங்களுரில் வசித்து வரும் அவர், 'அம்மா ஆத அம்மு' (அம்மாவான அம்மு) என்ற பெயரில் அந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
என்.கே.மோகன்ராம் கூறுகையில், புத்தகத்தில் 6 பிரிவுகளில் அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் இடம் பெற்று உள்ளன. ஜெயலலிதாவின் குடும்ப பின்னணி, அவரது இளமைப் பருவம், சினிமா பிரவேசம், அரசியல் வாழ்க்கை, குணநலன்கள், அவரது மரணம் ஆகிய 6 பகுதிகளாக பிரித்து இந்த புத்தகம் எழுதப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் மூதாதையர் ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்கு இடம் பெயர்ந்ததும், அவர்கள் நெல்லூர், லெட்சுமிபுரம், மேலக்கோட்டை ஆகிய பகுதிகளில் வசித்த விவரங்களும், மைசூரிலும், பெங்களூரிலும் ஜெயலலிதா தனது தாயார் சந்தியாவுடன் குழந்தை பருவ காலத்தில் வளர்ந்த விதம் குறித்தும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது என்றார்.
ஜெயலலிதாவை அம்மு என்றுதான் ஜெயலலிதாவின் தாயாரும், மறைந்த முதல்வரான எம்ஜிஆரும் அழைப்பார்கள். இதனால் தான் எனது புத்தகத்திற்கு அப்படி ஒரு பெயர் வைத்தேன் என்று கூறும் மோகன்ராம், தற்போது வெளியிட்டுள்ள கன்னட புத்தகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்வேன் என கூறியுள்ளார்.