ரஜினியின் "குரைக்காத நாயும் இல்லை" டயலாக்- ஜெகன் கட்சியில் வெடித்த உட்கட்சி பூசலில் "ஆயுத"மானது!
விஜயவாடா: ரஜினிகாந்த் குறிப்பிட்ட "குரைக்காத நாயும் இல்லை.. குறை சொல்லாத வாயும்" இல்லை என்ற வசனம் தற்போது ஆந்திரா அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் இடதுசாரிகள் களத்தில் உள்ளன.

ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க படுவேகமாக செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள், லோக்சபா தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு களம் சாதகமாக இருப்பதாக கூறுகின்றன.
அதேநேரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் உட்கட்சி பூசலும் தலையெடுக்கத் தொடங்கி இருக்கிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் புலிவெந்துல, சந்திரபாபு நாயுடுவின் குப்பம் ஆகிய தொகுதிகளைத் தவிர பெரும்பாலான தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியிலும் உட்கட்சிப் பூசல் உச்சகட்டமாக தலைவிரித்தாடுகிறது. சரி இதில் ரஜினிகாந்த் எங்கே வந்தார்? என்கிறீர்களா?
மயிலாவரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வசந்த கிருஷ்ண பிரசாத். ஆனால் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜோகி ரமேஷ் முயற்சித்து வருகிறாராம். இதனால் மயிலாவரம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முட்டல் மோதல் வெடித்திருக்கிறது. வசந்த கிருஷ்ண பிரசாத், ஜோகி ரமேஷ் இருவரும் பகிரங்கமாகவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரடியாகவே தலையிட்டு இருவரையும் எச்சரித்தும் இருக்கிறார்.
இதனிடையே மயிலாவரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எம்.எல்.ஏ. வசந்த கிருஷ்ண பிரசாத், ஆந்திராவில் ஊழல் செய்யாத எம்.எல்.ஏக்களில் நானும் ஒருவன். 2024 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அரசியலில் தொடருவேன். இல்லை எனில் என்னுடைய தொழிலை பார்க்க கிளம்பிவிடுவேன். நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல, குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. எனக்கு எந்த ஜாதி முத்திரையோ எதுவும் இல்லை. ஆனால் என் மீது எல்லா முத்திரையும் குத்திப் பார்க்கின்றனர். எனக்கு என தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி வைத்திருக்கிறேன். அரசியலில் இல்லாமல் போனால் அதனை கவனித்துக் கொள்ளப் போகிறேன். எனக்கு எதிராக சதி செய்பவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நன்கு அறிவார் என்றார்.












Click it and Unblock the Notifications