ஆந்திரா: தலைமை செயலகம் முற்றுகை- தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை குண்டு கட்டாக தூக்கிய அண்ணன் ஜெகன் போலீஸ்
விஜயவாடா: ஆந்திரா தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை குண்டு கட்டாக போலீஸ் கைது செய்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் உள்ளது. இந்த கட்சிகளுடன் ஜனசேனா, பாஜக, காங்கிரஸும் களத்தில் உள்ளன.

லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது பொதுவான தேர்தல் கருத்து கணிப்பு. ஆனால் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியைத் தக்க வைப்பாரா? என்கிற கேள்வி தொடருகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சவால்விடும் வகையில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்தது டெல்லி மேலிடம். ஆந்திரா காங்கிரஸ் தலைவராக பதவியேற்றது முதலே பம்பரமாக சுழன்று வருகிறார் ஷர்மிளா.
மேலும் ஆந்திரா சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டி அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா. இதனால் அவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க ஆந்திரா போலீசார் முயற்சித்தனர். ஆனால் ஷர்மிளாவோ, நேற்று இரவு முழுவதும் ஆந்திரா காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விஜயவாடாவில் இன்று முன்னெடுத்தார் ஷர்மிளா. இதனால் ஷர்மிளாவையும் காங்கிரஸ் கட்சியினரையும் போலீசார் தடுக்க முயற்சித்தனர். ஆனால் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்த ஷர்மிளா முயன்றார். இதனால் அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது சிஎம் டவுன் டவுன் என ஷர்மிளா முன்பாகவே அவரது அண்ணன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆந்திரா தலைமை செயலக பகுதியில் பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications