நீதிமன்ற அவமதிப்பு.. ஆந்திராவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பு.. உயர்நீதிமன்றம் அதிரடி
அமராவதி: நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவமதிப்பு செய்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஆந்திரா உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் எரகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தலபகா சவித்ரமா. விவசாயி. இவரது கணவருக்கு சொந்தமாக இருந்த 3 ஏக்கர் நிலத்தை தேசிய மனநல இன்ஸ்டிடூட் அமைக்க வருவாய்த் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு முறைப்படி எந்த தகவலும் தலபகா சவித்ரமாவிடம் தெரிவிக்கப்படவில்லை. கையகப்படுத்திய நிலத்துக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகையையும் அதிகாரிகள் வழங்கவில்லை.

பதில் இல்லை
இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் தலபகா சவித்ரமாவுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதிகாரிகளும் இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருந்தனர்.

உயர்நீதிமன்றம் சென்ற வழக்கு
ஆனால் வாக்குறுதி அளித்தபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இதனால் 2017-ம் ஆண்டு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை விவசாயி தலபகா சவித்ரமா தாக்கல் செய்தார். இதனை உடனடியாக விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உடனடியாக இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

சிறை தண்டனை
இப்போது வரை பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் மதிக்கவில்லை. இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஆந்திரா உயர்நீதிமன்றம், உத்தரவை மதிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட தற்போது பணியில் இருக்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், ஓய்வு பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

யார், யார்?
மேலும், வழக்கு தொடர்ந்த விவசாயிக்கு தங்களின் சம்பளத்தில் இருந்து அபராத தொகை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலத்தின் முதன்மை நிதிச் செயலர் சம்ஷெர் சிங் ராவத், முதல்வரின் கூடுதல் செயலர் ரெவு முத்யல ராஜூ (இவரும் நெல்லூர் ஆட்சியராக பணியாற்றியவர்), நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சக்ரதர பாபு மற்றும் முன்னாள் நெல்லூர் ஆட்சியர் சேஷகிரி பாபு ஆகிய நான்கு அதிகாரிகளுக்கும் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2017-ம் ஆண்டு முதன்மை நிதிச்செயலராக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மன்மோகன் சிங்குக்கும் சிறை தணடனை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications