200 கிராம் தங்க பிஸ்கட், வைர நெக்லஸ்னு.. மாமியார் பிறந்த நாளுக்கு ரூ.1 கோடிக்கு பரிசு தந்த மருமகள்!
அமராவதி: மாமியார் மருமகள் என்றாலே மோதல் போக்குதான் இருக்கும் என்றே நம்மில் பலரும் நினைத்து இருப்போம். ஆனால், இங்கே மருமகள் ஒருவர் தனது மாமியாரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெரும்பாலான வீடுகளில் மாமியார் மருமகள் இடையே சுமுகமான உறவு இருக்காது. அதுவும் 10-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மாமியார்- மருமகள் இடையே மோதல் தான் இருக்கும்.

இப்போது இந்த மோதல் எல்லாம் குறைந்து, ஓரளவுக்கு நிலைமை பரவாயில்லை என்றே சொல்லலாம். ஆனால், இப்போது மாமியார் மருமகள் இடையே சிக்கிக்கொள்வது என்னவோ கணவர்கள் தான்.
மாமியார் மருமகள் உறவு
மாமியார் மருமகள் இடையேயான மோதல் குறித்துப் பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். பல விஷயங்களை நாம் பார்த்தே கூட இருக்கலாம். ஆனால், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. அங்கு மாமியாருக்கு மகள் கொடுத்த கிப்ட்டை பார்த்தால் நிச்சயம் ஒரு நொடி நீங்கள் ஸ்டன் ஆகிவிடுவீர்கள்.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகேஷ்.. இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாயகி என்பவருக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பிறகு எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் சுகேஷின் தாயார் பவானிக்கு 50ஆவது பிறந்த நாள் வந்துள்ளது.
50வது பிறந்த நாள் கொண்டாட்டம்
தனது மாமியாரின் 50வது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்த ஸ்ரீரங்கநாயகி அட்டகாசமான ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறார். மாமியார் பிறந்த நாளுக்கு உற்றார் உறவினர்களை அழைத்து பிரம்மாண்ட விழா நடத்தியிருக்கிறார். மாமியார் வீட்டின் உள்ளே கால் அடி எடுத்து வைத்த உடன் பூக்கள் தூவி வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், கலர் கலர் புஸ்வானமும் ஒளிர மாமியார் ஒரு நொடி வாயடைத்துப் போய்விட்டார். அதன் பிறகு பவானியை மேடை ஏற்றி கேக்கையும் வெட்ட வைத்துள்ளார் ஸ்ரீரங்கநாயகி.
ஒரு கோடிக்கு பரிசு
ஆனால், இது வெறும் ஆரம்பம் தான். இதற்குப் பிறகு தான் மெயின் சம்பவமே நடந்துள்ளது. தனது மாமியாருக்கு அதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். 50ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மாமியாருக்கு, 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீரங்கநாயகி. மேலும், தங்கம் விலை பறந்து கொண்டு இருக்கும் சூழலில் 100 கிராம் எடைகொண்ட இரு தங்கக் கட்டிகளையும் பரிசாகக் கொடுத்துள்ளார்.
மேலும், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் என கிப்டுகளை வாரி வழங்கியுள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளார். இதை எல்லாம் பார்த்து மாமியார் பாவனி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார். பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்களும் கூட இதை வியந்து பாராட்டினர்.
மாமியார்- மருமகள் என்றாலே சண்டை இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இருந்துள்ளது இந்த பிறந்த நாள் விழா.. இந்த பிறந்த நாள் விழா இருக்கட்டும். உங்க வீட்டில் மாமியார்- மருமகள் உறவு எப்படி இருக்குனு ஒரு நாலு வார்த்தை சொல்லுங்க..!












Click it and Unblock the Notifications