கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்தியது ஆந்திர அரசு.. விவசாயிகள் மகிழ்ச்சி
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக ஆந்திர அரசு நிறுத்தியுள்ளது. தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு இந்த முடிவெடுத்துள்ளது.
சித்தூர்: கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூர் சீதலகுப்பத்தில் விவசாயிகள் கடுமையாக போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனையடுத்து, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்தபின் அணைக்கட்டும் பணியை ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கிளை கால்வாயில் தடுப்பணை கட்டுவதை ஆந்திர அரசு இன்று நிறுத்தியுள்ளது. இதனை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தமிழக மற்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் இடையே நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.