ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
கடப்பா: ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தமது குடும்பத்தின் இரு சகோதரிகளான ஒய்.எஸ்.ஷர்மிளா மற்றும் ஒய்.எஸ். சுனிதா ரெட்டி ஆகியோரின் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்.
ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆந்திரா லோக்சபா தேர்தலில் கடப்பா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரும் ஜெகன் மோகனின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ஜெகன் மோகன் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி அவினாஷ் ரெட்டி மீண்டும் போட்டியிடுகிறார்.

கடப்பா லோக்சபா தொகுதியை மையமாக வைத்துதான் ஆந்திராவையே அலற வைத்த படுகொலை சம்பவம் நடந்தது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா அல்லது ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி (ஜெகன் - ஷர்மிளா தாய்) விஜயா அம்மா ஆகியோரை நிறுத்த வேண்டும் என்று ஜெகனிடம் வலியுறுத்தியவர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி. மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதர். ஜெகன் மோகன் - ஷர்மிளாவின் சித்தப்பா. ஆனால் விவேகானந்த ரெட்டியின் கருத்தை மதிக்காமல் மற்றொரு உறவினரான அவினாஷ் ரெட்டிக்கு சீட் கொடுத்தார் ஜெகன். அத்துடன் 2019-ம் ஆண்டு விவேகானந்த ரெட்டி, வெட்டிப் படுகொலையும் செய்யப்பட்டார்.
விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவினாஷ் ரெட்டியின் தந்தை விஜயபாஸ்கர ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவினாஷ் ரெட்டியையும் சிபிஐ இந்த கொலை வழக்கில் சேர்த்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த விவேகானந்த ரெட்டி குடும்பமும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸில் இணைந்து ஜெகன் மோகனுக்கு எதிராக புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் அவரது தங்கையான ஷர்மிளா. கடப்பா லோக்சபா தொகுதியில் அவினாஷ் ரெட்டியை எதிர்கொள்ளும் ஷர்மிளாவுக்கு உறுதுணையாக கை கோர்த்திருப்பது விவேகானந்த ரெட்டியின் குடும்பம். விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி, ஷர்மிளாவுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். விவேகானந்த ரெட்டியின் மனைவி சவுபாக்யா ரெட்டி அண்மையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவினாஷ் ரெட்டியையே மீண்டும் கடப்பா தொகுதி வேட்பாளராக நிறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
சொந்த குடும்பத்தில் தங்கைகளே தமக்கு எதிராக களத்தில் நிற்பது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. புலிவெந்தலு சட்டசபை தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சகோதரிகள் ஷர்மிளா, சுனிதா ரெட்டியின் அரசியலையும் விம்ர்சித்தார். எதிர்க்கட்சிகள்தான் ஷர்மிளாவையும் சுனிதாவையும் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். தங்கைகளின் ஆவேச அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் ஜெகன் அண்ணா? என்பது ஜூன் 4-ந் தேதிதான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications