ஆந்திராவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்கள்.. விவரம் அறிய தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு
ஆந்திராவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்கள் குறித்து விவரம் அறிய அம்மாநில போலீஸ் தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது.
ஹைதராபாத்: ஆந்திராவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்கள் குறித்து விவரம் அறிய அம்மாநில போலீஸ் தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டுக்கும் கடத்தும் கும்பல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
திருப்பதி, கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் செம்மர கடத்தல் அரங்கேறி வருகிறது. இதனைத் தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக - ஆந்திரா-கர்நாடக மாநில எல்லைகளிலும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர போலீஸ் சந்தேகம்
இதுதொடர்பாக ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், செம்மரம் வெட்ட வந்த அவர்களை போலீசார் விரட்டிச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொன்று வீசப்பட்டனரா?
அவர்களின் உடல்களை கைப்பற்றியுள்ள போலீசார், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் சந்தேகம்
ஆனால் தமிழக தொழிலாளர்கள் மரம் வெட்ட செல்வதை தடுக்கும் வகையில் ஆந்திர போலீசாரே தமிழக இளைஞர்களை கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
எண்கள் அறிவிப்பு
இந்நிலையில் ஆந்திர ஏரியில் சடலமாக மிதந்த தமிழர்கள் குறித்து விவரம் அறிய அம்மாநில போலீசார் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் பெற 9121100565, 9121100581, 9121100582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.