காஷ்மீர்: பெண்ணை கடத்த முயன்ற தீவிரவாதியின் வீட்டை கொளுத்தி பொதுமக்கள் ஆவேசம்!!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் துப்பாக்கி முனையில் உள்ளூர் பெண்ணை கடத்த முயன்ற லஷ்கர் தீவிரவாதியின் வீட்டை கொளுத்தி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் மற்ற தீவிரவாதிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக தீவிரவாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பாரா என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த இம்ரான் அகமத் ஜப்ரூ என்ற நபர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் செயல்பாட்டாளராக இருந்துவந்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு பல்வேறு ரகசிய வேலைகளை செய்து கொடுத்து, அவர்களுக்கு உதவியாக இருந்துவந்துள்ளார். மேலும் லஷ்கர் இயக்கம் பிறப்பிக்கும் கட்டளைகளையும் செயல்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இம்ரான், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் புகுந்து அங்கிருந்த இளம்பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்த முயன்றுள்ளார். அதனை பார்த்த அருகில் இருந்த பெண் அலறி கூச்சல் போடவும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அப்பெண்ணை காப்பாற்றினர்.
அதனைத் தொடர்ந்து இம்ரான் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, இம்ரான் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இம்ரானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இம்ரானின் செயலால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், இன்று ஆவேசமடைந்து அவரது வீட்டை தீவைத்து கொளுத்தினர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களும் கொளுத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் எஸ்.பி. அப்துல் கயூம், போலீஸ் ஆவணங்களில் இம்ரான் மீது வெவ்வேறு இரண்டு குற்றங்களுக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர் என இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் இம்ரான் ஏராளமான குற்றச்செயல்களை புரிந்துள்ளதாகவும், ஆனால் அவர் மீதான வழக்கை உரிய முறையில் விசாரிக்காமல் அவசரப்பட்டு விடுவித்துவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.
காஷ்மீரின் கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில், தீவிரவாதிக்கு எதிராக உள்ளூர் மக்கள் பொங்கி எழுந்தது புதிய திருப்பம் என்றும், இதே ரீதியில் பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்தால் காஷ்மீரிலிருந்து தீவிரவாதிகளை விரட்டியடித்து, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தீவிரவாதிக்கு எதிரான காஷ்மீர் மக்களின் இந்த ஆவேச எதிர்ப்பு அங்கு பதுங்கி உள்ள மற்ற தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு ரகசியமாக உதவி வருபவர்களுக்கும் மட்டுமல்லாது,எல்லைக்கு அப்பால் இருக்கும் தீவிரவாத இயக்கங்களின் தலைமைக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.