“அதெப்படி பகல்ல சமைக்கக் கூடாதுனு சொல்லலாம்?”.. நிதிஷ் குமார் மீது செருப்பு வீசிய "நிதிஷ்"!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். பகலில் சமையல் செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞர், முதல்வர் மீது செருப்பு வீசியுள்ளார்.
தமிழகத்தைப் போலவே, வடமாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. சமீபத்தில் பீகார் அரசு தீவிபத்துக்களைத் தவிர்க்க புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, கிராமப்புறங்களில் பகல் நேரங்களில் யாரும் சமைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனால், குடிசைகளில் தீப்பிடிப்பது தவிர்க்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு மக்களிடையே ஆதரவைப் போலவே எதிர்ப்பும் காணப்படுகிறது.
இந்நிலையில், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், நேற்று தலைநகர் பாட்னாவில் மக்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சியான ஜனதா தர்பாரில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம், அர்வல் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், திடீரென தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி நிதிஷ் குமார் மீது அவர் வீசினார்.
இதில், அந்த காலணியானது நிதிஷ் குமாரின் நெஞ்சில் பட்டு கீழே விழுந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞரின் பெயரும் நிதிஷ்குமார் தான் என்பது தெரிய வந்தது. பகல் நேரங்களில் சமையல் செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு அவர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த இளைஞர் மனநலம் பாதித்தவர் போன்று காணப்பட்டதால், அவரை விட்டு விடும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார் முதல்வர் நிதிஷ்குமார். இருப்பினும், முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "காலணி மிகவும் அழுக்காக இருந்ததால், எனது மேலாடையில் அதன் அடையாளம் பதிந்துவிட்டது" என்றார்.
ஏற்கனவே இதே இளைஞர், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி நடத்திய ஜனதா தர்பார் நிகழ்ச்சியிலும் ரகளையில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications