இஸ்ரேலை கண்டித்து காஷ்மீரில் வீதிக்கு இறங்கிய மாணவ, மாணவிகள்
ஸ்ரீநகர்: காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தை தவிர்க்க கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள போதிலும் மாண, மாணவிகள் திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இஸ்ரேல் மீது காஸா முனை பகுதியை ஆட்சி செய்துவரும் ஹமாஸ் தீவிரவாதிகள் (பாலஸ்தீன சன்னி முஸ்லிம் பிரிவினர்) ராக்கெட் வீச்சு நடத்துகின்றனர். பதிலுக்கு காஸா முனை மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஒரு வாரகாலமாக நடந்து வரும் இந்த யுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகமெங்கும் எதிர்ப்பு
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலின்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படங்களை கையில் ஏந்தியபடி பல இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
விடுமுறை அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் போராட்டத்தில் குதிக்க மாணவ, மாணவிகள் தயாராகினர். இதை அறிந்த மாநில அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையை அறிவித்து, விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஒன்றுகூடிய மாணவ, மாணவிகள்
இதற்கு நடுவேயும் போராட்டத்தை மாண, மாணவிகள் நடத்தி வருகிறார்கள். காஷ்மீரின் லால்சவுக் பகுதியில் நூற்றுக்கணக்கான, இஸ்லாமிய மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர். மாணவிகள் முகத்தை மூடும்படி பர்தா அணிந்தபடி கோஷங்கள் எழுப்பினர்.
பலத்த பாதுகாப்பு
இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணாக்கர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பல பகுதிகளில் போராட்டம்
மாணவர்கள் போராட்டத்தை தவிர்த்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெவ்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திரளான ஆண்களும், பெண்களும் பங்கேற்று இஸ்ரேலுக்கு எதிராக கோஷமிட்டு வருகிறார்கள். கைகளில் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் செல்கிறார்கள்.
அமைதியாக நடைபெறுகிறது
இருப்பினும் இதுவரை நடந்த போராட்டங்கள் அமைதியாக முடிந்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுக்க கூடாது என்றும் காஷ்மீர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.