ஆந்திரப் பெண்களே உஷார்... இவர்தான் பெண்களைக் குறி வைத்து ஊசி போடும் மர்ம நபர்...!
ஹைதராபாத்: ஆந்திராவில் பெண்களைகர் குறி வைத்து மர்ம ஊசியைப் போட்டு விட்டுத் தப்பி வரும் மர்ம நபரின் வரைபடத்தை ஆந்திர மாநில போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த மர்ம நபரைப் பிடிக்க 400 போலீஸார் அடங்கிய 50 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இன்ஜெக்ஷன் சைக்கோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நபர் பெண்களை மட்டும் குறி வைத்து ஊசி போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 22 மற்றும் 26 ஆகிய தேதிகளுக்குள் 13 பெண்களை இந்த நபர் ஊசி போட்டு பயமுறுத்தியுள்ளார். பைக்கில் வலம் வரும் இந்த நபர் தனியாக இருக்கும் பெண்களை நெருங்கி மின்னல் வேகத்தில் அவர்களது தோள்பட்டையில் ஊசியைப் போட்டு விட்டுத் தப்பி விடுகிறாராம்.
இருப்பினும் இந்த 13 பேரில் 2 பேருக்கு மட்டுமே இந்த நபர் ஊசி போட்டதாகவும், மற்ற 11 பேரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயற்சித்து விட்டு தப்பியோடி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நல்ல கட்டுமஸ்தான உடம்புடன் கூடியவராக இந்த நபர் இருக்கிறாராம். இந்த மர்ம நபர் போட்டதாக கூறப்படும் 2 நீடில்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவை தடயவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த சோதனையில் விஷமோ, போதை மருந்தோ அல்லது பாக்டிரியா, வைரஸ் போன்றவையோ இல்லை என்று தெரிய வந்துள்ளதாம். எனவே பெண்கள் பயப்பட வேண்டாம் என்று மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி. பாஸ்கர் பூஷன் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரின் வரைபடத்தை இன்று வெளியிட்ட ஆந்திர போலீஸார், இந்த நபர் குறித்த தகவல் தருவோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் இந்த நபர் பதிவாகியுள்ளாரா என்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications