ஆந்திராவை பிரித்தால் நக்சல்கள் கை ஓங்கும்- நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: கிரண்குமார் ரெட்டி

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என்பது கிரண்குமார் ரெட்டியின் நிலைப்பாடு. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரவைக் குழுவை நேற்று நேரில் சந்தித்தார் அவர்.
அப்போது ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். அதன்பிறகு, ஆந்திர பவனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக நக்சலைட்டுகள் இருந்து வருவதாகப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே பலமுறற தெரிவித்துள்ளார். மேலும், அந்த இயக்கத் தலைவர்களில் 80% பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
தற்போது ஆந்திராவை இரண்டாகப் பிரித்தால் நக்சல் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துவிடும். அதனால் ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை மத்திய அமைச்சரவைக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் நீர்ப்பாசனம் முக்கிய பிரச்னையாக உள்ளது. தற்போது நீர்ப்பாசனம் தொடர்பாக கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களுடன் பல பிரச்னைகளை ஆந்திர மாநிலம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்டால் தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் கூடுதல் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடிக்கு உதவும் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச் சூழலில் மாநிலம் பிரிக்கப்பட்டால் இந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதில் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா இடையே பிரச்னை தோன்றும். இத் திட்டங்களுக்கான நீர்ப்பாசன விநியோகம், நிதி ஆகியவற்றிலும் பெரிய சிக்கல் ஏற்படும். இத் திட்டங்களுக்கு இதுவரை ரூ.13 ஆயிரம் கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திரமாக இருக்கும்போது வெள்ளக் காலங்களில் கண்காணிப்பதும், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதும் எளிதாக உள்ளது. ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்டால் இதுபோன்ற ஒத்துழைப்புக்கு சாத்தியமில்லாமல் போய்விடும். இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும் என்றார் கிரண் குமார் ரெட்டி.












Click it and Unblock the Notifications