துணை ராணுவப்படையின் முதல் பெண் டிஜிபி-யாக தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு
டெல்லி: நேபாளம், பூடான் நாடுகளுடனான இந்திய எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படையின் தலைமை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 1980ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், சாஸ்த்ரா சீமா பால் என்ற இந்திய-நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படையின் தலைவராக கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார்.

துணை ராணுவப்படையின் தலைவராக பெண் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெறும் வரை இந்த பதவியில் அவர் இருப்பார். 58 வயதான அர்ச்சான ராமசுந்தரம், இதற்கு முன்பு தேசிய குற்ற பதிவு ஆணையத்தின் இயக்குனராக இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சாஸ்த்ரா சீமா பால் தலைமையகத்தில் மத்திய துணை ராணுவப்படையின் தலைமை இயக்குனராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ச்சனா ராமசுந்தரம், இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது. எனது நியமனத்தை பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இப்படையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபடுவேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications