மினி ‘ஆபரேஷன் லோட்டஸ்’.. ராகுல் நுழையும்போதே ‘ஷாக்’ கொடுக்க ரெடியாகும் பாஜக! பதைபதைப்பில் காங்கிரஸ்!
போபால் : ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது, ராகுலுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி கொடுக்க பாஜக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை வருகையை முன்னிட்டு, 'மினி ஆபரேஷன் தாமரை'யை அம்மாநில பாஜக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த வாரத்தில் மத்திய பிரதேசத்தில் நடைபயணமாக நுழையவுள்ள ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையை தோல்வியுறச் செய்யும் திட்டத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராகி வருவதாக அம்மாநில அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
2 ஆப்ஷன்.. வேற மாதிரி கணக்கு போடும் பாமக.. பாஜக கூட்டணிக்கு கல்தா? ஈபிஎஸ் பிளானுக்கு கிரீன் சிக்னல்?
ராகுல் யாத்திரை
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 7ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்தார். வரும் 20ஆம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்குள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இடையே குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார் ராகுல்.
ஷாக் கொடுக்க பாஜக திட்டம்
இதனால், மத்திய பிரதேசத்தில் 23ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்வார் எனத் தெரிகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்திற்குள் ராகுல் காந்தி நுழையும் அதே நேரத்தில், ம.பி காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் யாத்திரையை கலகலக்கச் செய்யும் வகையில், அம்மாநில பாஜக தலைமை, மினி ஆபரேஷன் லோட்டஸை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆபரேஷன் லோட்டஸ்
ஏற்கனவே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு 22 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறி, ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அங்கு ஆட்சியமைக்க வழி வகுத்தது. அடுத்த மாதங்களில், மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினார்கள்.
பாஜக முயற்சி
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவுக்கு கிராஸ் வோட்டிங் செய்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைமை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக பின்னணி
12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தங்கள் பக்கம் வரப்போவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எம்.எல்.ஏக்களில் ஒருவர் பாஜக பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர், மற்றொருவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெரிய தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர். அவரும் முன்பு பாஜகவில் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் அவர்களுக்கு அடுத்த முறை சீட் கிடைக்காது என்று கருதுவதால் பாஜக பக்கம் தாவ இருக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றனர்.
அவங்களா வர்றாங்க
ஆனால், பாஜக ம.பி மாநில தலைவர் வி.டி.சர்மா, மத்திய பிரதேசத்தில் நாங்கள் ஆபரேஷன் தாமரை போன்ற எந்த திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பாஜகவில் சேர்பவர்களை நாங்கள் என்ன செய்ய முடியும்? பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு பலரும் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருக்கலாம்.
திட்டம் உறுதி
குடும்பக் கட்சியான காங்கிரஸில், நாட்டுக்குச் சேவையாற்றும் தங்கள் விருப்பத்தின்படி செய்ய முடியாது என்பதால், அவர்கள் பாஜகவுடன் இணைய விரும்புகிறார்கள், அதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் சர்மா. இதன் மூலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவில் இணைக்கும் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை பிஜேபி செயல்படுத்தி வருவது உறுதியாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
12 எம்.எல்.ஏக்கள்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் 12 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ கிரீன் சிக்னல் காட்டி விட்டதாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றன. அம்மாநில காங்கிரஸ் கட்சி இதனை வெறும் வதந்தி எனக் கூறி வருகிறது. எனினும், காங்கிரஸை வலுப்படுத்த ராகுல் நடைபயணம் நடத்தி வரும் சூழலில், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி விடக்கூடாது என காங்கிரஸ் கட்சியினர் பதற்றத்தில் இருக்கிறார்களாம்.