ஆம்ஸ்ட்ராங் கொலை: 2வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த சீசிங் ராஜா.. போலீசை கண்டதும் தப்பியோட்டம்?
அமராவதி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் தனது 2-வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்ததாகவும் போலீசாரை கண்டதும் காரில் தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய ரவுடி சீசிங் ராஜாவை காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுகவை சேர்ந்த மலர்க்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகனான சதீஷ், அதிமுகவைச் சேர்ந்த ஹரிதரன் ஆகியோரை கைது செய்தனர்.
கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சீசிங் ராஜா மீது கொலை, ஆள் கடத்தல் என 33 வழக்குகள் உள்ளன.
இவர் ஆற்காடு சுரேஷின் நிழல் போல செயல்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது. அவரது கொலைக்கு பழி வாங்கியதில், சீசிங் ராஜாவும் முக்கிய பங்கு வகித்து உள்ளார். சீசிங் ராஜா ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றனர்.
இந்த நிலையில், சீசிங் ராஜா போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது மனைவி வீட்டில் தங்கியிருந்த சீசிங் ராஜா, போலீசாரை கண்டதும் காரில் தப்பி ஓடியுள்ளார். சீசிங் ராஜா தப்பி ஓடிய காரின் பதிவெண்ணை வைத்து அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications