கழுத்தளவு பனியிலும் கண்ணிமைபோல் காக்கும் வீரர்கள்..முழங்கால் பனியில் கர்ப்பிணிக்கு உதவிய நெகிழ்ச்சி
ஸ்ரீநகர்: முழங்கால் அளவுக்கு பனியில் கர்ப்பிணியை 2 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முடங்கின. சாலை முழுவதும் பனிப்படலமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
இதனால் போக்குவரத்து முடங்கியதால் காஷ்மீருக்கு வந்த சுற்றுலா பயணிகளால் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

விமான சேவை
மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளையும் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் ஹோட்டல்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு இலவச தங்கும் விடுதிகளை ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறை ஏற்பாடு செய்தது.

சுற்றுலா பயணிகள்
இதனிடையே பனிப்படலங்களில் விளையாடி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறார்கள். பனியால் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மருத்துவ வசதிக்கு கூட வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் பார்கியன் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அகமது ஷேக்.

கர்ப்பிணி
இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல வேண்டும். ஆனால் பனிப்படலத்தால் செய்வதறியாது திகைத்தார். அந்த நேரம் அவரது மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மன்சூர், ராணுவ வீரர்களிடம் தெரிவித்தார். கர்ப்பிணிக்கு உதவ முழங்கால் ஆழமான பனியில் செல்வது என முடிவு செய்தனர்.

வைரல் வீடியோ
அது போல் ஒரு பலகையில் கர்ப்பிணியை படுக்க வைத்து 4 வீரர்கள் அந்த பெண்ணை தூக்கிச் சென்றனர். 2 கி.மீ. தூரத்தில் உள்ள கரல்பூரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே கழுத்தளவு மூடும் பனியில் நம்மை காக்கும் வீரர்கள் முழங்கால் பனியில் நடந்து சென்று கர்ப்பிணியை காப்பாற்றிய வீடியோ வைரலானதை அடுத்து அவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications