இந்திய ராணுவத்தில் புரட்சி – விரைவில் “கமாண்ட் பட்டாலியன்களுக்குத்” தலைமை ஏற்கப் போகும் பெண்கள்!
அதாவது ராணுவத்தின் முக்கியப் பிரிவுகளில் பெண்களுக்கும் தலைமை தாங்கும் பொறுப்பை அளிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
பெண்களுக்கு பயிற்சி:
அதன்படி 2015-16 இல் ராணுவத்தில் சேரும் பெண் அதிகாரிகளுக்குப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படவுள்ளது.
ஆண்களுக்கு சமமாகும் பெண்கள்:
மேலும் எதிர்காலத்தில் ஆண் அதிகாரிகளுக்கு சமமாக பெண் அதிகாரிகளும் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி பெறுவார்கள்.
முதல்கட்ட பிரிவுகள்:
முதல் கட்டமாக ஏவியேஷன், பொறியியல் பிரிவு, சிக்னலிங் போன்ற பிரவுகளில் பட்டாலியன்களுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பெண் அதிகாரிகளுக்குக் கிடைக்கும்
தளர்வுகள் உண்டு:
அதேசமயம் உடல் கூறு தகுதியில் பெண் அதிகாரிகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும். அதேசமயம், ஆண் அதிகாரிகளுக்குத் தரப்படும் அதே அளவிலான பயிற்சியே பெண்களுக்கும் தரப்படும். அதில் தளர்வு இருக்காது.
புதிய முயற்சி:
இதுவரை ராணுவத்தில் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்குவது ஆண் அதிகாரிகள் மட்டுமே. பெண் அதிகாரிகள் யாரும் கமாண்ட் தகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் பிரிவு அல்லாத பிரிவுகளில் மட்டுமே பெண் அதிகாரிகளுக்குத் தற்போது தலைமை தாங்கும் அனுமதி உள்ளது.
சாதனைப் பெண்கள்:
1990 ஆம் ஆண்டுதான் பெண் அதிகாரிகள் ராணுவத்தில் முதல் முறையாக சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களுக்கு சட்டப் பிரிவு, சப்ளை மற்றும் ஆயுத கிட்டங்கி ஆகிய பிரிவுகளில்தான் முக்கியப் பொறுப்புக் வழங்கப்படுகின்றன. அதேசமயம் சுதந்திரத்திற்கு முன்பிருந்து மருத்துவப் பிரிவிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.