மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை! இந்த வாரமே மருத்துவமனையில் அட்மிட்?
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதனால், இந்த வார இறுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதனால், இந்த வார இறுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சரும், பாஜவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவர். 65 வயதாகும் ஜெட்லிக்கு, சர்க்கரை நோயைக் கட்டுபடுத்துவதற்காக, 2014ல் இரப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அதையடுத்து, இந்த வார இறுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் லண்டன் நகரில் அடுத்த வாரம் நடக்க உள்ள பொருளாதார பேச்சுவார்த்தையில் ஜெட்லி கலந்து கொள்வதாக இருந்தது. இந்த பயணத்தை ஜெட்லி ரத்து செய்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் பயணத்தை ஜெட்லி ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த, ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்திலும் ஜெட்லி பங்கேற்கவில்லை. அவ்வளவு தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.