அருண்ஜேட்லிக்கு ஆப்பு வைக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்... அப்படி என்னதான் நடந்தது?
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலை முன்வைத்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதே அருண்ஜேட்லி தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றத்தான் என முதல்வர் கேஜ்ரிவால் அதிரடியாக குற்றம்சாட்டியிருந்தார்.
அதிலும் சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. அப்படி என்ன டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கும் அருண்ஜேட்லிக்குமான தொடர்பு?
டி.டி.சி.ஏ. (DDCA) என்பது டெல்லி மற்றும் அதனைச் சுற்றிய மாவட்டங்களில் கிரிக்கெட்டை வளர்த்தெடுப்பதற்கான அமைப்பு. மற்ற கிரிக்கெட் சங்கங்களைப் போல இல்லாமல் ஒரு தனியார் நிறுவனமாக இது செயல்பட்டு வந்தது.
இதன் நிர்வாகிகளாக பிஷன் சிங் பேடி, பா.ஜ.க. எம்.பி. கீர்த்தி ஆசாத் என பலரும் இருந்தபோது ஊழல் முறைகேடு புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கம்பெனி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தியது.
அதில் 2006ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை மொத்தம் 23 ஊழல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது அந்த நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது, வரி கட்டாமல் இருந்தது போன்றவை அடங்கும்.
குறிப்பாக டெல்லி பெரோசா கோட்லா மைதானம் சட்ட விதிகளை மீறி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும் தெரியவந்தது. பெரோசா கோட்லா மைதான நிலம், டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டிக்கு சொந்தமானது. டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு இந்த நிலம் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் 2002ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது.
இதை நன்கு தெரிந்த பின்னரும் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் 16 வயது இளைஞரை 14 வயத்துக்கும் குறைவானோர் அணியில் சேர்ப்பது; 19 வயது இளைஞரை 16 வயதுக்கும் குறைவானோர் அணியில் சேர்ப்பது போன்ற முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளன.
இப்படியான டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு விசாரணை நடத்த முடிவு செய்தது. இதற்காக கடந்த மாதம் 12-ந் தேதியன்று 3 நபர் கமிட்டி ஒன்றையும் அமைத்தது.
இத்தகைய முறைகேடுகள் நடந்த டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2012ஆம் ஆண்டு வரையில் தலைவராக இருந்தவர்தான் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி,.
ஆனால் தற்போதைய டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் சேதன் சவுகான், அருண்ஜேட்லியைப் பொறுத்தவரையில் சங்கத்தின் அன்றாட விவகாரங்களில் தலையிட்டது இல்லை என்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலோ, விசாரணை நடத்தி ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என சபதம் போட்டிருக்கிறார்...
விடாது கருப்புபோல!