அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு- மேலும் 6 பேர் கைது
டெல்லி: ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில் மேலும் 6 பேரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசி அழைப்புகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக கடந்த ஆண்டு டிசம்பரில் புகார் எழுந்தது. இது தொடர்பாக லோக்சபா பாஜக உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க டெல்லி போலீசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லி போலீஸ் உதவி ஆணையரின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் போன்ற ஒரு போலி முகவரி மூலம், அருண் ஜேட்லி உள்பட 5 பேரின் தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் கேட்கப்பட்டதாகத் தெரிய வந்தது.

இது குறித்து விசாரிக்க டெல்லி போலீஸில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில், அருண் ஜேட்லி உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் அவர்களின் தொலைபேசிக்கு வந்த 52 அழைப்புகளின் விவரம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.
இது தொடர்பாக அனுராக் தபஸ், அனுராக், நீரஜ், நிதீஷ் ஆகிய போலீசார் கைது செய்யப்பட்டனர். மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், பாதுகாப்புத் தன்மை வாய்ந்த ஆவணத்தில் மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், அவர்கள் 4 பேரும் கடந்த மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications