‘அமைச்சர் என்னைக் கொல்ல முயற்சித்தார்’... அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: அரசியல் நெருக்கடி காரணமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில், அமைச்சர் ஒருவர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் அம்மாநில ஆளுநர் ராஜ்கோவா.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அருணாச்சலப் பிரதேசததின் முதல்வராக நபம் துகி பதவி ஏற்றார்.
இந்த சூழ்நிலையில் ஆளும் காங்கிரசில் கோஷ்டி பூசல் காரணமாக மாநில அமைச்சரவைக்கு நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி அணியாக செயல்பட்டனர். அவர்கள் பா.ஜனதா மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதனால் அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், புதிய முதல்வராக கலிகோபால் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், நபம்துகி பதவி விலக மறுத்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
அவருக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசின் அனுமதி இல்லாமலேயே சட்டசபையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட்டார். இவ்வாறு தொடர் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அருணாச்சல பிரதேச ஆளுநர் ராஜ்கோவா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் முன்னாள் முதல்வர் நபம் துகியின் ஆதரவு அமைச்சர்களில் ஒருவர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 14ம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக ராஜ்கோவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நபம் துகியின் ஆதரவு அமைச்சர்கள் தன்னைச் சந்திக்க வந்ததாகவும், அப்போது அமைச்சர்களில் ஒருவர் தன்னைக் கொல்ல முற்பட்டதாகவும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.