கேரளாவின் அருவிக்கரா இடைத்தேர்தல் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி!
திருவனந்தபுரம்: கேரளாவின் அருவிக்கரா இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சபரிநாதன் 10 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில், இடதுசாரி கூட்டணி வேட்பாளர் விஜயகுமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மறைவை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருவிக்கரா தொகுதிக்கு கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில், கார்த்திகேயனின் மகன், சபரிநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு போன்ற ஸ்டார்கள் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் விஜயகுமார் போட்டியிட்டார். இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபரிநாதன், 10 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகுமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சபரிநாதன் மொத்தம் 56 ஆயிரத்து 448 வாக்குகளும், விஜயகுமார், 46 ஆயிரத்து 320 வாக்குகளும் பெற்றனர். பாஜகவின் ராஜகோபால், 34 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
உம்மன்சாண்டி தனது 4 ஆண்டு சாதனைகளுக்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால், ஆர்.கே.நகர் போல ஒரு குதிரை ஓடும் பந்தையமாக இல்லாமல், அருவிக்கராவில் முத்தரப்பும் கடும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.