காஷ்மீரில் ராணுவத்தை விலக்க வாக்கெடுப்பு- பூஷண் கோரிக்கை- கேஜ்ரிவால் மறுப்பு!
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கோருவது சரியல்ல என்றார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாந்த் பூஷணின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து பூஷண் பேசியது அவரது சொந்த கருத்து. ஆம் ஆத்மி கட்சியின் கருத்து அல்ல என்றார்.