பார் இல்லை, சரக்கும் இல்லை... தமிழகம், கர்நாடகாவுக்கு படையெடுக்கும் கேரளத்து "பீர்"பால்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாலும், கோடை காலத்து தேவையை நிறைவேற்ற முடியாமலும் கேரள மாநில மது கழகம் தடுமாறி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு வந்து பீர் உள்ளிட்டவற்றை வாங்குவது அதிகரித்துள்ளதாம்.
கோடை கால தாக சாந்திக்காக 38 லட்சம் கேஸ் பீர்களுக்கு அது ஆர்டர் கொடுத்திருந்ததாம். ஆனால் 22 லட்சம் கேஸ்கள்தான் வந்துள்ளதாம். இதை வைத்துக் கொண்டு சமாளிப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுகிறார் மதுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் சேவியர்.

பீர் மற்றும் ஒயின் தேவை அதிகரித்து வருவதாலும், கோடை காலம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாலும் சமாளிப்பது சிரமமாக உள்ளது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து வாங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆனால் அனைத்து மாநிலங்களிலுமே தற்போது கோடைகாலம் என்பதால் அங்கிருந்து பெறுவதிலும் சிக்கல் இருப்பதாக சேவியர் கூறுகிறார்.
தற்போது கேரலாவில் 499 பீர் மற்றும் ஒயின் பார்லர்கள் உள்ளன. பார்களை மூடும் அரசின் முடிவைத் தொடர்ந்து 300 பார்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. பல பார் உரிமையாளர்கள் பீர், ஒயின் உரிமத்திற்காக உயர்நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
இதற்கிடையே மதுத் தேவைக்காக தமிழகம் மற்றும் கர்நாடகத்தை மதுப் பிரியர்கள் நாடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழக எல்லையோரங்களில் உள்ள நகரங்களுக்கு கேரளாவிலிருந்து நிறையப் பேர் வந்து மது வாங்குகின்றனராம். அதேபோல கர்நாடகத்திலிருந்தும் நிறைய சப்ளை ஆகிறதாம்.












Click it and Unblock the Notifications