வரி விதிப்பில் மாற்றம்... அசோக் லகிரி ஆய்வுக் குழுவுக்கு ஓராண்டு காலம் அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: இந்தியாவில் வர்த்தகர்களும் தொழில் அதிபர்களும் எதிர்கொள்ளும் வரி விதிப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அசோக் லகரி குழு, அறிக்கை அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2014-15 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, வர்த்தகர்களும் தொழில் அதிபர்களும் எதிர்கொள்ளும் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.
அதன்படி, முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அசோக் லகரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு விரிவான ஆய்வு செய்து தனது அறிக்கையை நவம்பர் மாதம் 25 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்தக் குழுவினர் தொடர்ந்து வர்த்தகர்களையும், தொழில் அதிபர்களையும் சந்தித்து, வரிவிதிப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதால், இக்குழுவுக்கு மேலும் ஓராண்டு கால அவகசாம் அளித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆய்வு முடிந்த பின்பு இக்குழுவினர் தங்களது விரிவான அறிக்கையை நேரடி வரிவதிப்பு வாரியத்துக்கும், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறைக்கும் அளிப்பார்கள்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் புதிய வரி விதிப்புகள் தொடர்பான சுற்றறிக்கைகள், வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.