ஏ.. எப்புர்ரா.. லாம்போகினி காராக மாறிய மாருதி! மாஸ் காட்டிய மெக்கானிக்! முதல்வருக்கு ஸ்பெஷல் கிஃப்ட்!
திஸ்புர்: அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல கார் மெக்கானிக் ஒருவர் மாருதி காரை ஆடம்பரமான 'லாம்போகினி' காரை போன்று வடிவமைத்து அதனை அம்மாநில முதலமைச்சருக்கு பரிசளித்துள்ளார்.
பொதுவாக சாதாரண கார்களில் சில மாற்றங்களை செய்து அதனை விலையுயர்ந்த காருடன் ஒப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடமும் இருக்கிறது.
இந்நிலையில் இதனை ஒரு தொழிலாகவே மாற்றி அப்படி தயாரிக்கப்பட்ட காரை முதலமைச்சருக்கு பரிசாக மெக்கானிக் ஒருவர் வழங்கி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லாம்போகினி
அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் கார் மெக்கானிக் நூருல் ஹக். இவர் சாதாரண கார்களை விலையுயர்ந்த கார்களை போன்று மாற்றியமைப்பதில் கை தேர்ந்தவர். இந்நிலையில், இவர் நேற்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த கார்தான் தற்போது மாநிலம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இது மாருதி நிறுவனத்தின் சாதாரண கார்தான். ஆனால் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆடம்பர காரான 'லாம்போகினியை' போல இதன் தோற்றத்தை மாற்றி இருப்பதுதான் சிறப்பம்சம். லாம்போகினி காரில் உள்ளதை போல கதவுகள், ஸ்டேரிங், இருக்கைகள், ஹெட் லைட், பாடி பில்டிங் என எல்லாவற்றையும் நூருல் மாற்றியிருக்கிறார்.
மெக்கானிக்
இந்த காரை கண்டு வியந்த முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "நூருல் ஹக்கின் கார் வடிவமைப்பு சிறப்பானதாக இருக்கிறது. காரில் அமர்ந்து பார்த்தபோது மெய்சிலிர்த்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். நூருல் ஹக் சிறுவயதிலிருந்து அசாமில் மெக்கானிக்காக பணியாற்றி வந்திருக்கிறார். பின்னர் இவர் அசாமிலிருந்து நாகாலாந்துக்கு கார் மெக்கானிக் பணிக்கு சென்றிருக்கிறார். அங்குதான் இவருக்கு காரை மாற்றியமைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பல பழைய கார்களை இவர் புதியது போலவும், கூடுதல் அம்சங்களை இணைத்தும் உருவாக்கி இருக்கிறார். இதற்கு வரவேற்பும் அதிக அளவில் இருந்திருக்கிறது. இதனையடுத்து இவர் சாதாரண கார்களை ஸ்போர்ட்ஸ் கார்களாக மாற்றி வடிவமைக்க தொடங்கி இருக்கிறார்.
மூன்று மாதங்கள்
அப்போதுதான் இவருக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது. அதாவது இவ்வாறு மாற்றி வடிவமைக்கப்பட்ட காரை தனது சொந்த மாநில முதலமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த யோசனை. இதற்காக ஒரு பழைய மாருதி காரை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதன் என்ஜின் தரத்தை பரிசோதித்ததில் கார் நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே முதல் கட்டமாக அதனுடைய வெளிப்புற தோற்றத்தை முற்றிலுமாக களைந்திருக்கிறார். பின்னர் லாம்போகினியின் வெளிப்புற தோற்றத்தை போலவே இக்காருக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறார். இதற்காக மூன்று மாதங்கள் முழுமையாக எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
அரசு கைகொடுக்க வேண்டும்
எல்லாம் ரெடி. ஆனால் ஒரேயொரு குறை மட்டும்தான். காரின் ஹெட் லைட். மாருதி காரின் ஹெட் லைட் ரூ.700லிருந்து ரூ.1,500 வரைதான் இருக்கும் ஆனால், லாம்போகினியின் ஹெட் லைட் தனியாக கிடைப்பதே அரிது. மட்டுமல்லாது இது லட்சக்கணக்கில் இருக்கும். எனவே இதற்கு மாற்றாக விலையுயர்ந்த ஹெட் லைட்டை பொருத்தி இருக்கிறார். இப்படியாக கார் முழுவதும் பார்த்துப் பார்த்து வடிவமைக்க ரூ.10 லட்சம் ஆகியுள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் நூருல் கவலைப்படவில்லை. ஏன் இவ்வளவு செலவு செய்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர் கூறிய பதில் இதுதான், "இதை எல்லோராலும் செய்துவிட முடியாது. எனவே அரசு எங்களை போன்றவர்களை ஆதரிக்க வேண்டும். அதற்காகதான் இதை செய்கிறேன். அடுத்ததாக மற்றொரு காரை ஃபெராரி காராக மாற்ற முயன்று வருகிறேன். இதற்கு அரசு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.