பதற வைக்கும் காட்சி.. சாலையை கடக்க முயன்ற காண்டாமிருகம்.. முட்டி தூக்கிய லாரி.. ப்பா.. அந்த நொடி!
குவாஹாட்டி: அசாமில் சாலையை கடக்க முயன்ற காண்டாமிருகம் மீது லாரி மோதியதில் அது படுகாயம் அடைந்து காட்டுக்குள் ஓடிய வீடியோ காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், காட்டு விலங்குகள் நடமாடும் இடத்தை நம் தேவைக்காக ஆக்கிரமித்து ஒரு பாதையும் அமைத்து நாம் பயணிக்கிறோம்.
ஆனால், வனவிலங்குகளை பொறுத்தவரை அது அவற்றின் எல்லைதான். அந்த எல்லையை தாண்டி வரும் எந்தவொரு உயிரினத்தையும், பொருளையும் வன விலங்குகள் எதிரியாகவே பார்க்கும். மேலும், அந்தப் பகுதிகளில் அவை சுதந்திரமாகவும் நடமாடும்.
வனப் பாதையில் எச்சரிக்கை அவசியம்
அதனால் கார், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் காட்டுப் பாதை வழியே செல்லும் போது குறைவான வேகத்தில் செல்ல வேண்டும் என்பது வனத்துறையின் அறிவுறுத்தல் ஆகும். இல்லையெனில், அந்த வாகனங்களில் வனவிலங்குகள் அடிபட்டு விடும். ஆனால், பலர் இந்த விதிமுறையை மதிப்பதில்லை. ஏதோ, நம்மூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை போல வனத்தை ஒட்டிய சாலைகளில் வேகமாக செல்கின்றனர். இதனால் கனரக வாகனங்களில் அடிபட்டு மான், கரடி போன்ற விலங்குகள் காயம் அடைவதும், உயிரிழப்பதும் தொடர்கதையாகி உள்ளது.
காண்டாமிருகமும், பார்வைத்திறனும்..
பொதுவாக, காண்டாமிருகம் மிக மூர்க்கத்தனமாக விலங்காக இருந்தாலும், அவற்றுக்கு பார்வை திறன் மிகவும் குறைவு. அதாவது, 30 அடி தூரத்தில் அசையாமல் இருக்கும் ஒரு மனிதனை கூட காண்டாமிருகத்தால் பார்க்க முடியாது. இந்த குறைப்பாட்டால் அவை மற்ற விலங்குகளால் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், எதிரிகளுடன் போராடவுமே அவற்றுக்கு கடினமான தோல்களும், கூர்மையான கொம்பையும் இயற்கை வழங்கி இருக்கிறது.
அடிபட்ட காண்டாமிருகம்
இந்நிலையில், அசாமில் ஒரு காண்டாமிருகம் மீது லாரி மோதிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அசாமில் உள்ள ஹல்திபாரி வனப்பகுதி காண்டாமிருகங்கள் அதிக அளவில் வசிக்கும் காடு ஆகும். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த வனத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக ஒரு காண்டாமிருகம் ஓடி வந்தது. அப்போது அந்த வழியாக பயங்கர வேகத்தில் வந்த சரக்கு லாரி, காண்டாமிருகம் மீது மோதிவிட்டு சென்றது. இதனால் அந்த காண்டாமிருகத்துக்கு தலையில் பலத்த காயமடைந்து, நிற்க முடியாமல் பல முறை கீழே விழுந்து பின்னர் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது.
முதல்வர் கண்டனம் - அபராதம்
இதனிடையே, சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் இந்த வீடியோவை பார்த்து அந்த லாரி ஓட்டுருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவும் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அந்த லாரி ஓட்டுநரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார். இதன்பேரில், லாரி பதிவெண்ணை கொண்டு அதன் ஓட்டுநரை கண்டுபிடித்த வனத்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை.