6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முதல்வராக 15 ஆண்டுகாலம் பதவி வகித்து வடகிழக்கின் காங்கிரஸ் கட்சியின் முகமாக கோலோச்சியவர் மறைந்த மூத்த தலைவர் தருண் கோகாய் (வயது 86).
கொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் தருண் கோகாய். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றிய நிலையில் 1971-ம் ஆண்டு முதல் 6 முறை லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தருண் கோகாய். 1991-96-ல் பிரதமராக இருந்த நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம்பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் தருண் கோகாய். 1997-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநில அரசியலுக்கு திரும்பினார்.
1997-ம் ஆண்டு முதல் 5 முறை சட்டசபை எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு முதல் 2016 வரை 3 முறை அஸ்ஸாம் மாநில முதல்வராக பதவி வகித்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் மிக நீண்டகாலம் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர் தருண் கோகாய்.
இந்திரா காந்தி காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலராக, ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றி வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முகமாகவே திகழ்ந்தவர் தருண் கோகாய்.












Click it and Unblock the Notifications