அஸ்ஸாமில் 'உல்ஃபா' பயங்கரவாதிகள் மீண்டும் வெறியாட்டம்- 24 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க சதி!
குவஹாத்தி: சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தலைநகர் குவஹாத்தி உள்ளிட்ட 24 இடங்களில் உல்ஃபா பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து வெடிக்க சதித் திட்டம் தீட்டியிருந்தது அம்பலமாகி உள்ளது. 24 வெடிகுண்டுகளும் 'கடைசி நேரத்தில்' வெடிக்காமல் போனதால் குவஹாத்தி உள்ளிட்ட அஸ்ஸாம் நகரங்கள் தப்பி இருக்கின்றன என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள்.
அஸ்ஸாம் தனிநாடு கோருகிற இயக்கங்களில் ஒன்று உல்ஃபா-ஐ (ULFA-I). இதே உல்ஃபாவின் பல பிரிவுகள், தனிநாடு கோரிக்கையை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கும் திரும்பிவிட்டன. ஆனால் உல்ஃபா ஐ ஆயுதக் குழு மட்டும், அஸ்ஸாம் தனிநாடு கோரி வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றன.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் உல்ஃபா-ஐ வழக்கம் போல அழைப்பு விடுத்திருந்தது. ஆனாலும் அஸ்ஸாம் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தேசத்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில்தான் பாதுகாப்புப் படையினருக்கு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்தது. அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தி உட்பட மொத்தம் 19 இடங்களில் தொடர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய உல்ஃபா ஐ சதித் திட்டம் தீட்டியிருந்தது என்றும் இந்த குண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்த முயற்சி கடைசி நேரத்தில் தோல்வியடைந்துவிட்டது என்பதுதான் அந்த உளவுத் தகவல். இந்த 24 குண்டுகளில் ஒன்று அஸ்ஸாம் தலைமைச் செயலகம் அருகே வைக்கப்பட்டிருந்தது. அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் மட்டும் 8 இடங்களில் வெடிகுண்டுகளை உல்ஃபா தீவிரவாதிகள் வெடிக்க சதி செய்திருந்தனர். ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் முயற்சி 'கடைசிநேர' தொழில்நுட்ப கோளாறால் தோல்வி அடைந்தது. இதனால் அஸ்ஸாம் பேரழிவில் இருந்து தப்பி இருக்கிறது. இது தொடர்பாக உல்ஃபா இயக்கமும் ஊடகங்களுக்கு செய்தி அறிக்கையை அனுப்பி, கடைசி நேரத்தில் வெடிகுண்டுகள் செயல்படாமல் போய்விட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் உல்ஃபா பயங்கரவாதிகள தேடி அழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications