சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 23 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டேராடூன்: சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்க உள்ளார்.
உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேநேரத்தில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி ஓமிக்ரான் பரவலுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல்கள் நடந்தால் அரசியல் கட்சிகள் ஆன்லைனில் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பாஜகவின் நிலவும் உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை நியமித்திருக்கிறது பாஜக. இதனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அலை இம்மாநிலத்தில் உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியால் எளிதாக அறுவடை செய்துவிட முடியும் என்பது கள யதார்த்தம்.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ் மேலிடத்தின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான ஹரீஷ் ராவத்தின் இந்த கலகக் குரல் அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி டிசம்பர் 30-ந் தேதி உத்தரகாண்ட் மாநில பயணம் மேற்கொள்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்துடன் உத்தரப்பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்திலும் இதேபோல் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications