ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 7க்கு ஒத்திவைப்பு!
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
அரசு வழக்கறிஞரின் இறுதி வாதம் முடிவடைந்துவிட்டது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் எழுத்துப்பூர்வமாக வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் வாதம் தொடங்கவேண்டும்.
இந்த நிலையில் லெக்ஸ் ப்ராப்பர்டி நிறுவனம் மீதான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை திங்கட்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 6ஆம் தேதி வரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றையை தினம் இறுதி வாதத்தை தொடங்க ஜெயலலிதா தரப்புக்கு உத்தரவிட்டது.