அடுத்த லெவலுக்கு மாறுகிறது ம.பி. அரசு... ஏடிஎம் மூலம் மருந்து தர திட்டம்
போபால்: இலவச மருந்து விநியோகத் திட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது மத்தியப் பிரதேச அரசு. விரைவில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை ஏடிஎம் இயந்திரம் மூலம் விநியோகிக்க அது திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தையும் அது பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனைப் பராரிப்பு பொறுப்பில் இருக்கும் மாநில அரசின் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் கேக் தாசு கூறுகையில், 'இதுதொடர்பான பைலட் திட்டம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊரக சுகாதார மையங்களில் நடத்தப்படும்.
ஜூலை மாதமே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அதன் வெற்றியைப் பொறுத்து மாநிலம் முழுவதும் இது பின்னர் விரிவுபடுத்தப்படும்' என்கிறார்.
முதல்கட்ட பரிசோதனை...
மேலும், இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பது குறித்து தாசு கூறுகையில், ‘ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிக்கு முதலில் ஒரு சுகாதார ஊழியர் பிபி, ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை செக் செய்வார்.
மருந்து ஏடிஎம்...
பின்னர் டெலிமெடிசின் டாக்டருக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார். டாக்டர் நோயாளியுடன் பேசிய பின்னர் என்ன மருந்து தர வேண்டும் என்பதை ஏடிஎம் மெஷினுக்கு அறிவுறுத்துவார். அதன்படி அந்த மருந்தை மெஷின் நோயாளிக்குத் தரும்' எனத் தெரிவித்துள்ளார்.
வரப்பிரசாதம்...
ஊரகப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லாத இடங்களில் இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதால் இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி அடையும் என்று மத்தியப் பிரதேச அரசு நம்புகிறது.
மருத்துவமனைகள்...
மத்திய பிரதேசத்தில் தற்போது 8764 துணை சுகாதார மையங்கள், 1157 ஆரம்ப சுகாதார மையங்கள், 334 கம்யூனிட்டி சுகாதார மையங்கள் உள்ளன.
டாக்டர்களே இல்லை...
இதில் 600 ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர்கள் கிடையாது. ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 2 டஜன் கம்யூனிட்டி சுகாதார மையங்களில் டாக்டரே நியமிக்கப்படவில்லையாம்.