For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் மகரவிளக்கு... பொன்னம்பல மேட்டில் மகரஜோதி… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலையில் இன்று நடைபெற்ற ‘மகர விளக்கு' பெருவிழாவையும், பொன்னம்பலமேட்டில் 'மகரஜோதி'யாக தரிசனம் தந்த ஐயப்பனையும் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்க்க சரணகோஷமிட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜை முடிந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலையில் கட்டுக்கு அடங்காத அளவில் பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.

பம்பை விளக்கு பூஜை

பம்பை விளக்கு பூஜை

மகரவிளக்கு பூஜையின் போது நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பம்பை விளக்கு, பம்பை விருந்து ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை வந்துள்ள பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள அரிசி, பருப்பு, உணவு பொருட்களை ஒன்றாக வைத்து சமைத்து பம்பை நதிக்கரையில் ஐயப்பனுக்கு படைத்து அனைவரும் சாப்பிட்டனர்.மேலும் சபரிமலையில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

நதி முழுவதும் விளக்கு

நதி முழுவதும் விளக்கு

மூங்கிலில் செய்யப்பட்ட தேரில் நெய் விளக்குகளை ஏற்றி பம்பை நதியில் பக்தர்கள் மிதக்க விட்டனர். பம்பை நதி முழுவதும் நெய் விளக்கில் ஜொலித்த காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

திருவாபரணப்பெட்டி

திருவாபரணப்பெட்டி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. மகரவிளக்கு பூஜையின் போது, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பந்தள மகாராஜா

பந்தள மகாராஜா

பந்தளம் அரண்மனையில் வளர்ந்த ஐயப்பன் சபரிமலையில் கோயில் கொண்டார். பந்தளம் மன்னர் அவரை காண ஆபரணங்களுடன் சென்றதாக ஐதீகம். இதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் வம்சத்தினர் ஆபரணங்களுடன் பவனியாக சபரிமலை செல்வர். திங்கட்கிழமையன்று பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பவனி புறப்பட்டது.

பந்தளம் வலிய தம்புரான் ரேவதிநாள் ராமவர்மா ராஜா, உடைவாளை மன்னர் பிரதிநிதியிடம் கொடுத்தார். வானத்தில் கருடன் வட்டமிட, ஆபரண பவனி புறப்பட்டது. இன்று மாலை சரங்குத்தியில் திருவாபரண பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆபரணங்கள் அணிந்த ஐயப்பன்

ஆபரணங்கள் அணிந்த ஐயப்பன்

தொடர்ந்து 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டியை கோவில் சன்னதியில் தந்திரி கண்டரரு ராஜீவரரு பெற்றுக் கொண்டார். மாலை 6.30 மணிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

மகரஜோதி

மகரஜோதி

அதே சமயத்தில் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தோன்றியது. ஜோதி வடிவில் காட்சி அளித்த ஐயப்பனை சரணகோஷம் விண்ணை எட்ட பக்தர்கள் மெய்சிலிர்க்க தரிசனம் செய்தனர். அப்போது வானில் ஒளிர்ந்த மகர நட்சத்திரத்தையும் பக்தர்கள் தரிசித்தனர்.

குவிந்த பக்தர்கள்

குவிந்த பக்தர்கள்

மகர ஜோதியை தரிசிப்பதற்காக பொன்னம்பலமேடு, புல்மேடு, பெரியாவட்டம், சிறியாவட்டம், சன்னிதானம், பம்பையில் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

5000 போலீசார் பாதுகாப்பு

5000 போலீசார் பாதுகாப்பு

சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவசம் போர்டு செய்துள்ளார். சன்னிதானம், பம்பையில் மட்டும் 5,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மத்திய போலீஸ், கமாண்டோ போலீஸ் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படிபூஜை

படிபூஜை

மகரவிளக்கு பூஜையை தொடர்ந்து 7.28 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சபரிமலையில் பிரசித்தி பெற்ற படிபூஜை நடைபெறும். 19 ஆம் தேதி இரவு 11 மணி வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம். மறுநாள் 20 ஆம் தேதி காலையில் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த பிறகு கோயில் நடைசாத்தப்படும்.

English summary
The devotees of Lord Ayyappa will observe the ‘Makara Jyothi’ at Ponnambala Medu near Shabhari Mala Temple on Wednesday, January 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X