2017-ம் ஆண்டு பேரணி தொடர்பான வழக்கு: குஜராத் எம்.எல்.ஏ. மேவானிக்கு 3 மாதம் ஜெயில்
காந்திநகர்: 2017-ம் ஆண்டு போலீசார் தடையை மீறி பேரணி நடத்தியது தொடர்பான வழக்கில் குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி உட்பட 9 பேருக்கு குஜராத் நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து ஜிக்னேஷ் மேவானி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் தலித் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் மேவானி. தற்போது காங்கிரஸ், மேவானியை தீவிரமாக ஆதரித்து வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உக்கிரமாக விமர்சனங்களை முன்வைப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இந்த பின்னணியில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார் என கடந்த மாதம் அஸ்ஸாம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜிக்னேஷ் மேவானி. இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்தது.
ஆனால் அஸ்ஸாம் போலீசார் மற்றொரு வழக்கில் மேவானியை கைது செய்தனர். போலீசார் முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரைத் தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் 2-வது கைது சம்பவம் அரங்கேறியது. ஆனால் அஸ்ஸாம் போலீசாரை நீதிபதி கடுமையாக சாடி மேவானியை ஜாமீனில் விடுவித்தார்.
இதன்பின்னர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார் ஜிக்னேஷ் மேவானி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் கைது நடவடிக்கையானது குஜராத் பெருமையை சீர் குலைத்துவிட்டது. அஸ்ஸாம் போலீசாரால் நான் கைது செய்யப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. இது பிரதமர் அலுவலகத்தால் திட்டமிடப்பட்ட சதித் திட்டம். குஜராத் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் என்னை முடக்கும் நடவடிக்கைதான் இது என்றார்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு குஜராத்தில் போலீசார் அனுமதி இல்லாமல் விடுதலை பேரணி ஒன்றை நடத்தியதாக ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று ஜிக்னேஷ் மேவானி உட்பட 9 பேருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மேவானி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications