அஞ்சாத பெண் சிங்கம்.. கேரள விஐபிகள் வயிற்றில் புளி கரைக்கும் அதிரடி சந்தியா!
கொச்சி: சந்தியா ஐபிஎஸ்.. கேரள பெரும் புள்ளிகள் அத்தனை பேரும் இந்த பெயரை கேட்டாலே வியர்வை மழையில் நனைந்துவிடுகிறார்கள். அத்தனை வேகம், யாருக்கும் வளையாத தன்மை, குறியை தப்பாமல் பாய்ந்து பிடிக்கும், லாவகம்.. என இத்தனைக்கும் ஒரே பெயர் சந்தியா. மொத்தத்தில் கேரளாவில் சமூக விரோதிகளை வேட்டையாடும் காக்கிச் சட்டை சிங்கம்.
மாநிலத்தை உலுக்கும் எந்த ஒரு வழக்காக இருந்தாலும், எங்கே சந்தியா என்று தேடுகிறது காவல்துறை தலைமை. இப்போதெல்லாம், பொதுமக்களே சந்தியாவைத்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று கொடி பிடிக்கும் நிலைக்கு போயுள்ளது கேரளம். இதற்காக வருங்காலங்களில் சேட்டன்கள் 'ஹர்த்தால்' செய்தாலும் ஆச்சரியமில்லை.
இவரது துணிச்சல் வெளிப்பட்டது கேரள அமைச்சர் பி.ஜே.ஜோசப் கைது செய்யப்பட்டபோதுதான். அச்சுதானந்தன் அமைச்சரவையில் சீனியர் அமைச்சராக இருந்த இவர், சென்னை-கொச்சி விமானத்தில் லட்சுமி கோபகுமார் என்ற டிவி தொகுப்பாளினியிடம் சில்மிஷம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்தார். இதை அப்போதைய ஐஜிபி சந்தியா தலைமையிலான போலீஸ் குழு விசாரித்தது.
சிக்கிய ஜோசப்
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சம்பவம் நடந்ததாக புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதே மாதம், சந்தியா டீம் விசாரணை அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பித்தது. 20 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி ஆவணப்படுத்தியிருந்தார் சந்தியா. இதையடுத்து ஜோசப் அமைச்சர் பதவி பறிபோனது. இந்த வழக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதும், ஜோசப் விடுதலை செய்யப்பட்டதும் அறிந்ததே.
Recommended Video
கொடூர கொலை
கடந்த வருடம் கேரளாவை உலுக்கிய ஒரு சம்பவம் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா, எர்ணாக்குளம் அருகேயுள்ள பெரும்பாவூரிலுள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டதுதான். அக்கொலை வழக்கை ஏடிஜிபி சந்தியா தலைமையிலான டீம்தான் விசாரித்தது. எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் சந்தியாவின் கண்களில் பட்டது அந்த ஒரு செருப்பு.
செருப்பிலிருந்து துப்பு
செருப்பு எந்த கடையில் வாங்கப்பட்டது, அதை வாங்கியவர் யார் என விசாரித்தபோது, வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த நபர்தான் செருப்பை வாங்கியிருந்தது தெரியவந்தது. செருப்பில் படிந்திருந்த ரத்தக் கறையை டிஎன்ஏ சோதனைக்குட்படுத்தியதில், ஜிஷா ரத்தம் மட்டுமல்லாது இன்னொருவர் ரத்தமும் செருப்பில் படிந்தது ஊர்ஜிதமானது.
ரத்த மாதிரி
குற்றவாளியை விரட்டி, காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்தது கேரள போலீஸ். அசாமை சேர்ந்த தினக்கூலி தொழிலாளிதான் இக்கொலையை செய்தது உறுதி செய்யப்பட்டது. ரத்த மாதிரி இருந்ததால் கொலையாளி தப்ப முடியாமல் போய்விட்டது. வழக்கு நடைபெறுகிறது. கேரள பெண்கள் தங்களை காக்க வந்த பரதேவதையாக சந்தியாவை பார்க்க தொடங்கியுள்ளனர்.
திலீப்பாக இருந்தாலும் கைதுதான்
இப்போது பாவனா கடத்தல் வழக்கு கேரளத்தை உலுக்கிய நிலையில், இதை ஐஜிபி தினேந்திர காஷ்யப் மற்றும் ஏடிஜிபி சந்தியா டீம்தான் விசாரித்தது. திலீப் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிந்தும் அசரவில்லை, அஞ்சவில்லை. சில தினங்கள் முன்பு திலீப்பிடம் 13 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உண்மைகளை கறந்தது இந்த டீம். பேச வேண்டியவர்களிடம் பேசி, பெற வேண்டிய அனுமதியையும் பெற்ற காவல்துறை, இப்போது திலீப்பை கம்பி எண்ண வைத்துள்ளது.
தாய்க்குலங்களின் வாழ்த்து மழை
திலீப் தொலைபேசி அழைப்பு அவரை சிக்க வைக்க முக்கிய காரணம். ஒரு சிறு தடயம் கிடைத்தாலும் அதிலிருந்து முழு ஆதாரங்களையும் வெளிக்கொண்டுவந்துவிடுவது சந்தியாவின் திறமை. இதுபோதாதா, சந்தியாவை தாய்க்குலங்கள் பாராட்டி மகிழ்வதற்கு. இன்றைய தேதியில், சந்தியாதான் கேரளாவின், சிங்கம்1, சிங்கம்2, சிங்கம்3 எல்லாமே.