மாயாவதியின் ஹெலிகாப்டர் தரையிறங்க விவசாயி ஒருவரின் விளை நிலம் அழிப்பு
பதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரை சந்திக்க வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஹெலிகாப்டர் தரையிறங்க ஒரு விவசாயியின் நிலம் அழிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயது சகோதரிகள் கடந்த மாதம் 27ம் தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற கதார் கிராமத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று வந்தார். அவரது வருகையையொட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலம் அழிக்கப்பட்டு அங்கு ஹெலிபேட் அமைக்கப்பட்டது. மாயாவதி சிறுமிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.