5 பேரை பலி கொண்ட ஹரியானா வன்முறை.. 'பஜ்ரங் தள்' பசு பாதுகாவலர் மோனு மானேசர்.. என்ன தொடர்பு?
ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் 5 பேரை பலி கொண்ட வன்முறை சம்பவங்களில் பஜ்ரங் தள் பிரமுகரும் பசு பாதுகாவலருமான மோனு மானேசர் பெயர்தான் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. மோனு மானேசருக்கும் ஹரியானா வன்முறைக்கும் என்னதான் தொடர்பு?
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் நேற்று நடத்திய ஊர்வலத்தை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வன்முறை வெடித்தது, நூ, குருகிராமில் நடந்த இந்த மோதல்களில் மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர்; இதனையடுத்து ஹரியானாவில் பதற்றம் தொடருகிறது. அம்மாநிலத்தில் மொபைல் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன - இதுதான் ஹரியானா வன்முறை தொடர்பான பொதுவான செய்தி.

மோனு மானேசர்: ஆனால் ஹரியானா வன்முறையின் மையப்புள்ளியாக அத்தனை கரங்களும் நீள்வது தீவிர இந்துத்துவவாதியான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த பசு பாதுகாவலர் என தன்னை அழைத்துக் கொள்கிற மோனு மானேசர் நோக்கிதான். யார் இந்த மோனு மானேசர்?
பசு பாதுகாப்பு கோஷ்டி: 2015-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் மாவட்ட பசுவதை தடுப்பு கண்காணிப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் மோனு மானேசர். 2019-ல் பசுக்களை கடத்திச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஊடக பிரபலமானவர் மோனு மானேசர். மோனுவும் அவரது கூட்டாளியான மோகித் யாதவும் இணைந்து சமூக வலைதளங்களில் பசுவதை தடுப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதல்களை நியாயப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டும் வந்தனர். யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோக்கள் வெளியிடுவது மோனுவின் வழக்கம்.
முஸ்லிம்கள் எரித்து கொலை வழக்கு: 30வயதாகும் மோனு மானேசர் கடந்த சில மாதங்களாக வட இந்திய மாநில ஊடகங்களில் 2 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என ஊடகங்களில் எழுதப்பட்டு வந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைத், நசீர் ஆகிய இருவரையும் அங்கிருந்து கடத்தி வந்து படுகொலை செய்து எரித்ததாக மோனு மானேசர் மீது உள்ளிட்ட அவரது குண்டர் படை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கில் மோனு மானேசரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் தீவிரமாக முயற்சித்தும் கடைசி நிமிடங்களில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பி ஓடுவதை மோனு மானேசர் தொடர்ந்து செய்து வந்தார்.
மோனு மானேசர் பங்கேற்பா?: இப்பின்னணியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஹரியானாவின் நூ மாவட்டத்தில் நேற்று பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர். இப்பேரணியில் பெருந்திரளாக இந்துக்கள் பங்கேற்க வேண்டும் என வீடியோக்கள் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார் தலைமறைவு கொலையாளி மோனு மானேசர். இந்நிலையில் நூ மாவட்டத்தில் பேரணி நடைபெற்ற போது அதில் மோனுவும் பங்கேற்கிறார் எனவும் தகவல்கள் பரவின.
5 பேர் பலி: இதனால் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இப்பேரணியை ஒருதரப்பினர் தடுத்து நிறுத்தினர். இந்த தகவல் காட்டு தீயாக, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்கிவிட்டதாக பரவியது. இதனையடுத்து குருகிராமில் முஸ்லிம்களின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த மோதலில் இமாம் உட்பட மொத்தம் 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications