ஐடி தலைநகரில் அசால்ட் வேண்டாம்.. பெங்களூரில் ஒரு மணி நேரத்தில் 10 செயின் அபேஸ்!
பெங்களூர்: நாட்டின் ஐடி தலைநகர் பெங்களூருவில் இன்று காலை ஒரு மணி நேர இடைவேளையில் 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெண்கள் பகலிலேயே தனியாக நடந்து செல்ல அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
பெங்களூரில் சில மாதங்கள் முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தன. இதை தடுக்க போலீசார் தீவிர தணிக்கை நடத்தினர். இதன்பிறகு கட்டுக்குள் இருந்த செயின் பறிப்பு சம்பவங்கள் இன்று மீண்டும் தலை தூக்கியுள்ளன.
இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள், நகரின் பல்வேறு காவல் நிலைய சரக பகுதிகளில் இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சந்திராலேஅவுட், விஜயநகரம் ஆகிய காவல் சரகங்களில் தலா 2 செயின் பறிப்பு சம்பவங்களும், காமாட்சிபாளையா பகுதியில் 3 செயின் பறிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவை மூன்று ஏரியாக்களும், பெங்களூரின் மேற்கு பகுதியில் அருகருகே உள்ளவை. எனவே ஒரே கும்பல்தான் பைக்கில் வந்து செயின் பறித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, நகரின் தெற்கு பகுதியான சென்னமனகெரே அச்சுக்கட்டு காவல் நிலைய எல்லையில் அதே நேரத்தில் 3 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. முகவரி கேட்பது போல நடித்தோ, அல்லது சாலையில் நடந்து செல்பவர்களை குறிவைத்தோ இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.