பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு சைக்கோ: மக்களே உஷார்- போலீசார் எச்சரிக்கை

பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் கடந்த 19ம் தேதி பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய்குமார்(38) என்ற வங்கி அதிகாரியை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றார். இந்நிலையில் ஜோதியின் செல்போனை அந்த நபரிடம் இருந்து வாங்கியவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் கைது செய்யப்பட்டார்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரியில் பொதுத் துறை வங்கி ஒன்று தங்களின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பணம் எடுத்த நபர் ஜோதியை தாக்கிய நபர் போன்று இருப்பதாக சிசிடிவி வீடியோவில் பதிவானதை பார்த்துவிட்டு தெரிவித்தது. அந்த நபர் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்த மூதாட்டியை கொன்றுவிட்டு அவரது மகனின் ஏ.டி.எம். கார்டை பறித்து பணம் எடுத்துள்ளார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து பெங்களூர் தனிப்படை போலீசார் அனந்தபூர் மாவட்டத்தில் அந்த நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மர்ம நபர் போலீசார் தன்னை தேடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. அவர் இரண்டு தாக்குதல்களின்போதும் ஒரே சட்டையை அணிந்திருப்பது தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற பயம் இல்லாததையே காட்டுகிறது. பொதுமக்கள் அந்த நபரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் ஒரு சைக்கோ போன்று தெரிகிறார்.
அதிகாலை அல்லது இரவு நேரத்தில் தனியாக வரும் பெண்களையே அவர் குறி வைத்து தாக்குகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications