பெங்களூரில் கட்-அவுட், போஸ்டர் ஒட்ட தடை.. மீறினால் ஜெயில்தான் கதி! பாடம் கற்குமா சென்னை?
பெங்களூர்: பிறந்த நாள் வாழ்த்துக்களையும், அரசியல் தலைவர் முகங்களையும் போஸ்டர், கட்-அவுட்டுகளில் பார்த்து, பார்த்து சலித்துப்போனவர்களா நீங்கள்.. அப்படியானால் நீங்கள் வாழ விரும்பும் நகரம் பெங்களூராகத்தான் இருக்க முடியும்.
கட்-அவுட் கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட சென்னையைவிட, பெங்களூரில் அதன் தாக்கம் குறைவுதான். சமீபகாலமாகத்தான் இப்பழக்கம் இங்கும் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. இதனால் மக்கள் கடுப்பாக ஆரம்பித்தன் விளைவு, முளையிலேயே அதை கிள்ளி எறிய கிளம்பியுள்ளது, பெங்களூர் மாநகராட்சியின் அதிரடி படை.
இந்த அதிரடிப்படை முன்பெல்லாம் விளம்பரங்கள் ஒட்டப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்கும் வேலையை மட்டுமே செய்துவந்தன. இனிமேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள அப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரம்
'1981ம் ஆண்டு கர்நாடக திறந்த வெளி சிதைவு' சட்டத்தின்கீழ் இந்த அதிரடி படையினர் வழக்கை பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகர போலீஸ் கமிஷனர் தலைமையில் இதற்கான செயல்திட்டம் நேற்று தீட்டப்பட்டது. இன்று முதல் இந்த படை நகர தெருக்களில் களமிறங்கிவிட்டது.

சினிமா விளம்பரம் கூட இல்லை
பிஜி ஹாஸ்டல் விளம்பரமோ அல்லது சினிமா தியேட்டர் விளம்பரமோ எதுவாக இருந்தாலும் சுவற்றிலோ, மரத்திலோ ஒட்டியிருப்பதை பார்த்தால் இந்த பறக்கும்படை, சம்மந்தப்பட்டவர்களை கொத்தாக தூக்கிச் சென்றுவிடும்.

பத்து இடம்
அதேநேரம், தலைவர்கள், தங்கள் ஆசை தீர போஸ்டர், கட்-அவுட் ஒட்டிக்கொள்வதற்காக நகரில் குறிப்பிட்ட ஒரு பத்து இடங்களை ஒதுக்கித்தரும்படி மாநகராட்சியிடம் கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த இடங்கள் எவை, எவை என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

போலீஸ் பாதுகாப்பு
விளம்பர தட்டிகளை அகற்றும் பறக்கும்படைக்கு 20 ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். தேவைப்பட்டால் லோக்கல் காவல் நிலையத்தின் உதவியையும் இந்த படை கேட்டு பெற முடியும். எனவே, இனிமேல் கழுதைகள் மேய்வதற்கு கூட பெங்களூரில் போஸ்டர்கள் கிடைக்கப்போவதில்லை.












Click it and Unblock the Notifications