கொல்கத்தாவில் வங்கதேச எம்பி படுகொலை- துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட கொடூரம்- 3 பேர் கைது!
கொல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தா மஜிதியா பகுதியில் சுபாஷ் அகர்வால் என்பவர் வீட்டில் முன்னர் வசித்து வந்தார். கொல்கத்தாவின் சிந்தி பகுதியை சேர்ந்த நகை ஏற்றுமதியாளர் கோபால் பிஸ்வாஸின் நெருங்கிய குடும்ப நண்பராகவும் இருந்தவர் அன்வருல் அசீம்.

கொல்கத்தாவில் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தார் அன்வருல் அசீம். கடந்த 13-ந் தேதி கோபால் பிஸ்வால் வீட்டில் இருந்து புறப்பட்ட அன்வருல் அசீம் திடீரென மாயமானார். இதனால் அவரை கொல்கத்தா போலீசார் வலைவீசித் தேடி வந்தனர். 4 நாட்கள் தேடுதலுக்குப் பின்னர் மே 17-ந் தேதி அன்வருல் அசீம் போன் சுவிட்ச் ஆனதால் தேடுதம் பணி முடங்கியது.
இந்த நிலையில் வங்கதேசத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும்தான் கொல்கத்தாவில் வங்கதேச எம்பி அன்வருல் அசீமை துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த கொலைக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது; இதில் ரகசியம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் வங்கதேச உள்துறை அமைச்சர்.
கொல்கத்தாவில் வங்கதேச எம்பி மாயமானது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் ஒரு பக்கம் தேடுதல் நடத்திய நிலையில் வங்கதேச காவல்துறையும் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் அன்வருல் அசீமை படுகொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.
அதே நேரத்தில் அன்வருல் அசீமை படுகொலை செய்த நபர்கள் வங்கதேச நாட்டவர்தான் என்பதால் இந்தியாவுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறது அந்நாட்டு அரசு. மேலும் அன்வருல் அசீம் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதா? இல்லையா? என்பதை கொல்கத்தா போலீசாரும் தெரிவிக்கவில்லை. வங்கதேச காவல்துறையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications